மாலைதீவில் வேலைவாய்ப்பு என்று ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

மாலைதீவில் வேலைவாய்ப்பு என்று ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

கினிகத்தேனை பிளக்வோட்டர் மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளை சேர்ந்த 197 பேரை மாலைத்தீவுக்கு தொழிலுக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாலைத்தீவில் கட்டப்படும் ஹோட்டல்களுக்கு தொழிலாளர்கள் தேவைப்படுவதாகத் குறித்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

மேற்படி தொழிலில் மாதம் ஒன்றிற்கு 1 இலட்சத்து 93ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் அதற்காக தரகருக்கு ரூபா 30,000 ஐ முதலில் செலுத்த வேண்டும் என தெரிவித்து, சந்தேகநபர் தம்மிடம் நிதி சேகரித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிதி சேகரிப்பின் பின்னர் கடந்த வருடம் நவம்பர் மாதம் குறித்த தொழிலாளர்களைச் சந்தித்த சந்தேகநபர், நவம்பர் 15ஆம் திகதி மாலைத்தீவுக்கு செல்ல தயாராக இருக்குமாறும் அதற்கான மருத்துவ பரிசோதனைக்கு என ரூபாய் 12,500 யை தொழிலாளிகளிடம் வசூலித்துள்ளதுடன் அவர்களை இரத்மலைனை பகுதியிலுள்ள வைத்திய மத்திய நிலையம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மருத்துவ சான்றிதழையும் பெற்றுக்கொடுத்த பின்னர், சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு பொருளாதார சுமைகளுக்கு மத்தியில் தமக்கு நல்ல தொழில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தாம் தமது வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்தும் உறவினர்களிடம் கடன் வாங்கியே சந்தேக நபருக்கு ரூபா 42,500 ஐ செலுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image