பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா முன்நின்று செயற்படும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா முன்நின்று செயற்படும்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முன்நின்று  செயற்படுவதோடு, நலன்புரி விடயங்களையும்  பெற்றுத்தரும் எனஅதன் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

உழைப்போரின் உன்னதத் திருநாளாம் மே தினத்தை உலகெங்கும் கொண்டாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள் என  இ.தொ.கா தலைவர்  செந்தில் தொண்டமான் விடுத்துள்ள 'மே தின' வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம் என்ற உண்மையை, பாட்டாளி வர்க்கம் இரத்தம்  சிந்திப் பிரகடனம் செய்த நாள்தான் மே முதல் நாள் ஆகும்.    அதிகாலை முதல் அந்தி சாயும்வரை  வேலை செய்ய வேண்டும் என்பதை எதிர்த்தும், எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தியும் எழுந்த போராட்டத்தின் வெற்றி தினமே மே தினம்!  இ.தொ.கா  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முன்நின்று  செயற்படுவதோடு, நலன்புரி விடயங்களையும்  பெற்றுத்தரும்.

உழைப்புக்கேற்ற ஊதிய மின்மை, கொத்தடிமைத் தனமான இன்னல்கள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களுக்கு விடுதலை கிடைத்த இந்த மே தின நன்னாளில், சிறுவர் தொழிலாளர் முறையை ஒழித்து, உழைப்பவரை உயர்த்துவோம் என்ற உறுதியை மேற்கொண்டு, தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் தொழிலாளர்களுக்கு உரிய பயன்களை அடையக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து,மறைந்த தலைவர்களான சௌமிய மூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான்   தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தது போல, இ.தொ.கா தொடர்ந்தும் அவர் வகுத்த வழியில்  தொழிலாளர்களுக்காக முன்நின்று செயற்படும். 

சமுதாயத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்கவும், வேலை வாய்ப்பு கிடைக்கவும் அவற்றின் மூலம் சமவாய்ப்பு அமையவும் இந்த மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம். தொழிலாளர்களின் வாழ்வில் வளமும், நலமும் கொழிக்கட்டும் என்று வாழ்த்தி,  எனதருமை தொழிலாளப் பெருமக்களுக்கு மீண்டும் எனது தொழிலாளர் தின நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேதினம் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும், விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் உறுதி கொண்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள தனது மேதினச்செய்தியில் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தனது செய்தியில் தெரிவித்துள்ளதாவது, உலகமெங்குமுள்ள தொழிலாளர்களால் கொண்டாடப்படும் மே தினத்தை இம்முறை மிகுந்த நம்பிக்கையோடு வரவேற்கின்றோம். மேதினம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், வேலை நேர நிர்ணயம் என இன்னும் பல உரிமைகளை வென்றெடுத்த வெற்றி தினமாகும். 

இன்றைய சூழலில் மலையக பெருந்தோட்ட மக்கள் பொருளாதார நெருக்கடிகளாலும், விலைவாசி உயர்வினாலும் பல்வேறு இடர்பாடுகளை மக்கள் சொல்ல முடியாத அளவிற்கு இன்று எதிர்நோக்கி வருகின்றார்கள். எனவே, இந்த மேதினத்தை தொழிலாளர் வர்க்க சிந்தனையோடும், ஒருமித்த குரலாகவும் எமது பலத்தை எடுத்துக்காட்டுவோம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காலம் காலமாக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளதுடன், சமகால தேவைகளுக்கேற்பவும் சேவையாற்றி வந்துள்ளது. எனவே, அனைத்து விதமான மாற்றங்களுக்கும், முன்னேற்றங்களுக்கும் எமது சமூக பணிகளை எமது சமூக பணிகளை முன்னெடுத்துச் செல்ல ஓரணியாய் ஒன்றிணைந்திடுவோம் என்றார் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image