அரச ஊழியர்களின் பாதுகாப்புக்கு சட்டம் உருவாக்குமாறு பிரதமர் ஆலோசனை

அரச ஊழியர்களின் பாதுகாப்புக்கு சட்டம் உருவாக்குமாறு பிரதமர் ஆலோசனை

அரச மற்றும் பகுதிநிலை அரச ஊழியர்களினால் கடமைகள் நிறைவேற்றப்படும் போது நேர்மையுடன் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமைய அந்த ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பளிக்கும் வகையில் சட்ட வரைவுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச மற்றும் பகுதிநிலை அரச ஊழியர்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று (13) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதற்கமைய தொடர்புடைய சட்ட வரைவுகளை தயாரிப்பதற்கு ஆதரவளிக்கும் முகமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் உள்ளிட்ட குழு நியமிக்கப்பட்டு அப்பரிந்துரைகளை ஒரு மாதக் காலப்பகுதிக்குள் வழங்குமாறு பிரதமர் பணித்தார்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்ட அரச மற்றும் பகுதிநிலை அரச ஊழியர்களுக்கு நிவாரணமளிப்பதன் நோக்கம் குறித்து பிரதமரின் செயலாளர் காமினி செனரத் விளக்கமளித்தார்.

2019 நவம்பர் 27 திகதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கமைய இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட வரைஞர் தில்ருக்ஷி சமரவீர  அவர்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன ஆகியோர் இதன்போது தெளிவுபடுத்தினர்.

அதிகாரிகளுக்கான சட்ட கட்டமைப்பிற்கு அப்பால் நேர்மையுடன் கடமைகளைச் செய்ய அனுமதிக்கக்கூடிய வரம்புகளை அடையாளம் கண்டு, அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய நிறுவனத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட வரைவொன்று அமைச்சரவை பத்திரமாக சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இதன்போது தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அரச ஊழியர்களுக்கு முகங்கொடுக்க நேரிட்ட பிரச்சினைகள் தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்னே விளக்கமளித்தார்.

குறித்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ, பிரதமரின் மேலதிக செயலாளர் (சட்டம்) கனேஷ் தர்மவர்தன, மேலதிக செயலாளர் (சட்டம்) சந்திரா ஜயதிலக, ஜனாபதிபதி பணிப்பாளர் நாயகம் (சட்டம்) ஹரிகுப்த ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image