தமது நாளாந்த வேதனத்திற்காகவே ஓல்ட்டன் தொழிலாளர்கள் போராடினார்கள் - சட்டத்தரணி நேரு கருணாகரன்

தமது நாளாந்த வேதனத்திற்காகவே ஓல்ட்டன் தொழிலாளர்கள் போராடினார்கள் - சட்டத்தரணி நேரு கருணாகரன்

(பி.மாணிக்கப்பிள்ளை)

சாமிமலை ஓல்ட்டன் தோட்ட முகாமையாளரை தாக்கியது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த 22 தொழிலாளர்களுக்கான பிணை 10.03.2021 புதன்கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இந்த தொழிலாளர்களுக்கு பிணை பெற்றக் கொடுப்பதற்காக முன்னிட்டு செயற்பட்ட சட்டத்தரணி நேரு கருணாகரனிடம் குறித்த வழக்கு தொடர்பான விடயங்களை நாம் வினவியபோது அவர் பின்வருமாறு தமது கருத்தை தெரிவித்தார்.

கடந்த 18ஆம் திகதி சாமிமலை ஓல்ட்டன் தோட்ட முகாமையாளரை தாக்கினார்கள் என குற்றபம் சுமத்தப்பட்ட தோட்டத்தின் 7 பெண் தொழிலாளர்கள் உட்பட 8 தொழிலாளர்கள் அட்டன் நீதவான் நீதிமனில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை 03.03.2021 வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நானும் பண்டாரவலையை சேர்ந்த சட்டத்திரணி ஸ்ரீல்ராஜ் இருவரும் சேர்ந்து நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக இந்த தொழிலாளர்களை பிணையில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்த போது பொலிஸ் மற்றும் முகாமை சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் அட்டன் நீதிமன்ற சட்டத்தரணிகள் சிலரும் ஆஜராகி இந்த தோட்ட தொழிலாளர்கள் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுப்படுவதாகவும், தீவிரவாத செயற்பாடுகளின் ஆரம்பகட்ட செயற்பாடாகவே இந்த தாக்குதலை தாம் பார்ப்பதாகவும் தீவிரவாத சட்டத்தின் கீழ் மேலும் பல குற்றச்சாட்டுக்களை இவர்கள் மீது சுமத்துவதன் ஊடாக இவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர்.

இவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப 03.03.2021 அன்று ஆஜர்படுத்தப்பட்ட மேலும் இரண்டு தொழிலாளர்கள் உட்பட 10 தொழிலாளர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

அதன் பிறகு தோட்ட தொழிலாளர்கள் சார்பாக நான் மற்றும் சட்டத்தரணி ஸ்ரீல்ராஜ் உட்பட் மேலும் பல சட்டத்தரணிகள் இணைந்து கௌரவ நீதிமன்றத்திற்கு இவ்விடயம் தொழிலாளர்களின் வேதனத்தை அடிப்படையாக கொண்ட பிரச்சினை பொலிசார் கூறுவது போல் அங்கு கொள்ளைச் சம்பவமோ தீவிரவாத சம்பவமோ இடம்பெறவில்லை என எடுத்துக் கூறினோம்.
மேலும் அவர்கள் தங்களின் நாளாந்த வேதனத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் அதனை மழுங்கடித்து பலி தீர்க்கும் முகமாக தோட்ட முகாமை பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்த தொழிலாளர்களை சிறையில் அடைக்க வழி செய்துள்ளதாகவும் கௌரவ நீதிமன்றத்திற்கு எடுத்து கூறியதோடு தொழிலாளர்களை தீவிரவாதிகள் என்று கூறிய கருத்தினை வாபஸ் வாங்குவதுடன் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.

இந்நிலையில் எமது இரு தரப்பு நியாயங்களையும் கேட்ட நீதிமன்றம் குறித்த 10 தொழிலாளர்களையூம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவித்தது
அத்துடன் மேலும் 12 தொழிலாளர்கள் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்டு இருக்கின்றார்கள் அவர்கள் தாங்களாக பொலிசில் சரணடைந்த நிலையில், அவர்கள் தங்க ஆபரணகளை சூரையாடினார்கள், தோட்ட பங்களாவிற்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களும் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களுக்கும் பிணை மனு சமர்ப்பிக்கப்பட்டது.

குறிப்பாக ஒரு மாதம் தொடக்கம்; ஒரு வயது வரையிலான குழந்தைகள் உடைய தாய்மாரும் இதில் அடங்குவதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் அவர்கள் யாரும் தோட்ட முகாமைக்கு எதிராகவோ நீதிமன்றத்திற்கு எதிராகவோ எந்த செயற்பாட்டிலும் ஈடுப்படவில்லை அவர்களின் போராட்டம் முழுமையாக நாளாந்த வேதனம் தொடர்பாகவே காணப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது என்று சட்டத்தரணி நேரு கருணாகரன் எம்மிடம் தெரிவித்தார்.

மேலும், இந்த தொழிலாளர்களின் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த பல சிவில் அமைப்புகள் இவர்களுக்கு பக்கபலமாக இருந்து அவர்களை பிணையில் எடுப்பது வரை தங்களின் முழுமையான பங்களிப்பினை வழங்கியமையை நன்றியுடன் நினைவுகூர்ந்த அவர், கௌரவ நீதிமன்றம் இனி வரும் காலங்களில் இவ்வாறான போராட்டங்களின் போது எவ்வித தாக்குதல்களில் ஈடுப்படவோ அல்லது சாட்சிகளை அச்சுறுத்தவோ கூடாது என்று நிபந்தனையாக கூறியதோடு தலா ரூபா 15000 ரொக்க பிணை மற்றம் சரீர பிணையில் அவர்களை விடுதலை செய்தது.
இந்த வழக்கு எதிர்வரும் 28 ஏப்பிரல் அன்று எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த தொழிலார்களின் நியாயத்தை நான் உட்பட பல சட்டதரணிகள் சுயமாக முன் வந்து வாதாடியமை குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்ு
ஆரம்பித்தில் எந்த தொழிற்சங்கங்களும் இந்த தொழிலாளர்களின் வழக்கு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால் இவர்களுக்க பிணை வழங்கப்படும் என்ற நிலையில் தங்களின் பெயரை விளம்பரபடுத்திக் கொள்வதற்காகவும் தொழிலாளர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும் நோக்கில் சட்டத்தரணிகள் கண்டியில் இருந்து வந்திருப்பதாக எல்லாம் காட்டிக் கொண்டார்கள் எனினும் இதற்கு முதல் எவரும் அவ்வாறு ஆஜராகாத நிலையில் நாம் பிணை கொடுக்கும் நிலைக்கு இந்த வழக்கை கொண்டு வந்த நிலையில் அவர்கள் இவ்வாறு செய்தது கேலி கூத்தாகவே உள்ளது என்றும் நேரு கருணாகரன் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி சட்டத்தரணி உட்பட பல சட்டத்தரணிகள் தோட்ட முகாமைத்துவத்திற்கு சார்பாக ஆஜரான நிலையில் தொழிலாளர்களுக்காக நான் மற்றம் சட்டத்தரணி ஸ்ரீல்ராஜ் உட்பட சில அட்டன் சட்டத்தரணிகளே ஆஜரானோம் எனினும் தொழிற்சங்கங்கள் எந்த ஒரு சட்டத்தரணியையும் வெளியில் இருந்து அழைத்து வரவில்லை என்பதே உண்மை என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Aulton

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image