மலையகத்துக்கான இந்திய அரசின் 10,000 வீட்டுத்திட்டம் வெகுவிரைவில்

மலையகத்துக்கான இந்திய அரசின் 10,000 வீட்டுத்திட்டம் வெகுவிரைவில்

மலையகத்துக்கான இந்திய அரசின் 10,000 வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்.

கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஊவா மாகாணத்திலுள்ள சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலும், தேர்தல் பிரசார ஆரம்பக்கூட்டமும் பண்டாரவளை, மாநகரசபை மண்டபத்தில் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று (05) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்களிடம் குறைநிறைகளையும், மாற்றுக் கருத்துகளையும் கேட்டறிந்த அமைச்சர், உடனடி தீர்வுகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். அத்துடன், நாகரீகமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சிசபைத் தேர்தல் அவசியமா? அதனால் மாற்றம் ஏதும் ஏற்படுமா? தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஜனாதிபதியாக ரணிலே இருப்பார். பிரதமராக தினேஷ் குணவர்தனவே செயற்படுவார்.

அமைச்சரவையிலும் மாற்றம் வராது.  நான் தேர்தலுக்கு எதிரானவன் அல்லன். தேர்தலொன்று நடைபெறுமானால் அது ஜனாதிபதி தேர்தலாகவே இருக்க வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், சஜித், ரணில் என இருவருக்கும் பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சவாலை ஏற்றால் அரசியல் எதிர்காலம் இல்லாது போய்விடும் என்பது இருவருக்கும் தெரியும். சஜித் பின்வாங்கினார். ரணில் சவாலை ஏற்றார்.

நாட்டில் 6 மாதங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை தற்போது இல்லை. அதேபோல ஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்திவிடவும் முடியாது. உடைப்பது இலகு. கட்டுவதுதான் கஷ்டம். இந்தியா உட்பட பல நாடுகள் உதவிவருகின்றன. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கிடைப்பதற்கு நிதி உத்தரவாதம்கூட வழங்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான கட்டங்களில் பதுளை மாவட்டமும் காங்கிரஸை தோளில் சுமந்துள்ளது. அந்த மண்ணை மறக்கமாட்டோம். தேர்தல் பிரச்சாரத்தை, எவரையும் கொச்சைப்படுத்தும் வகையில் முன்னெடுக்காமல், நாகரீகமாக முன்னெடுங்கள். “ - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image