அரச நிதி நிர்வாகம் பாராளுமன்றத்திற்கு பொறுப்பான விடயமாகும்

அரச நிதி நிர்வாகம் பாராளுமன்றத்திற்கு பொறுப்பான விடயமாகும்

அரச நிதி நிர்வாகம் தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திடம் மட்டுமே உள்ளது. எனவே, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தை தவிர்ந்த வேறு எவருடையதும் யோசனைகளையோ நிபந்தனைகளையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பிரதாய அரசியல் முறைமைகள் ஊடாக நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என்றும் அபிவிருத்தி அடைந்த இலங்கையை உருவாக்குவதாக ஏற்றுக்கொண்ட சவாலை அவ்வண்ணமே நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (04) நடைபெற்ற தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 29 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நாடு வங்குரோத்து நாடு, தற்போதைய அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடன் நீடிப்பு முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். கடந்த காலங்களில் நாட்டிற்கு வருகைத் தந்த தலைவர்களுடனும் அது குறித்து கலந்துரையாடினோம்.

கடன் நீடிப்பின் பின்னரும் எமது கடன்களை மீளச் செலுத்தாமல் இருக்க முடியாது. கடன் மீள்செலுத்துகைக்கான காலத்தை நீடித்துக்கொள்வதை மாத்திரமே செய்ய முடியும். அதேபோல் அத்தியாவசிய பொருட்களில் இறக்குமதிக்கு அவசியமான கடன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். அந்த கடன்களை செலுத்துவதற்கான முறைமையொன்றும் அவசியம். தற்போது உள்ள சம்பிரதாய பொருளாதார முறையினால் அதனை செய்ய முடியாது.

அதனால் போட்டித்தன்மை மிக்க ஏற்றுமதி பொருளாதாரத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

இருப்பினும் அதற்கு முன்னதாக கடன் விவகாரங்களை நாம் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதுகுறித்த யோசனைகளை அமைச்சரவையில் சமர்பித்துள்ள அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அதேபோல் பல்வேறு தரப்புக்களிடத்தில் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். பின்னர் அந்த யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்பித்திருந்தோம்.

பாராளுமன்றம் அரச நிதிக் குழுவிடம் ஆலோசித்த பின்னர் அதனை ஏற்றுக்கொள்வதற்கான யோசனை அரச நிதிக் குழுவினால் முன்வைக்கப்பட்டது. கட்சி பேதமின்றி அரச நிதி குழுவின் அனைவரும் திருத்தங்களையும் முன்மொழிந்தனர். அதற்காக அரச நிதிக் குழுவிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

எதிர்கட்சியும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என நாம் எதிர்பார்த்திருந்தோம். இருப்பினும் எதிர்கட்சிக்குள் காணப்பட்ட உள்ளக பிரச்சினைகளின் விளைவாக அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் இன்னும் சிலர் வாக்களிப்பில் கலந்துகொள்வதை தவிர்த்திருந்தமையும் கவலைக்குரியதாகும்.

எவ்வாறாயினும் ஆதரவு வழங்கிய அனைவரையும் நினைவுகூறுகிறேன். அது தொடர்பிலான யோசனைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கடன் நீடிப்பு பணிகளை செப்டெம்பர், ஒக்டோபர் மாதமளவில் நிறைவுச் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

அதற்காக எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும், பிற்பட்ட காலங்களில் எதிர்கட்சி எம்.பிக்கள் அதனை முன்னெடுப்பதற்கான பல உதவிகளை வழங்கியிருந்தனர். அவர்கள் அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. துரதிஷ்டவசமாக அனைவரினதும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. சிலர் இதற்கு தடைப்போட முற்படும் போது மற்றைய சிலர் வீதியிலிறங்கி போராட்டம் செய்ய முயற்சித்தனர். இருப்பினும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தற்போது நீதிமன்றத்திற்குச் சென்று அதற்கு தடை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அரசியல் நோக்கங்களுக்கான நீதிமன்றத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

அதேபோல், இந்த வேலைத்திட்டம் தடைப்பட்டால், வெளிநாடுகள் நம்முடன் கொடுக்கல் வாங்களில் ஈடுபடாது.

மீண்டும் நாட்டிற்குள் எரிபொருள் வரிசை, உரத் தட்டுப்பாடு, என்பன உருவாகும். அரச நிதி நிர்வாகம் பாராளுமன்றத்திற்கு பொறுப்பான விடயமாகும். மேற்படி வேலைத்திட்டத்தை பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது.

அரசியலமைப்பின் 04 வது உறுப்புரைக்கமைய மக்கள் இறைமை அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது.

பாராளுமன்றத்தின் பொறுப்புக்களை பாராளுமன்றம் நிறைவேற்றும். ஏனைய செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும். அதன்படி நிதிசார் செயற்பாடுகள் அனைத்தும் பாராளுமன்றத்திலேயே முன்னெடுக்கப்படும். அதனால் பாராளுமன்றத்தின் சட்டத்திட்டங்களுக்கு அமையவே அரசாங்கம் செயற்படும்.

நாம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தை பாராளுமன்றத்தின் அறிவிப்பின்றி நிறுத்தப்போவதில்லை. அதனால் பாராளுமன்றம் தவிர வேறு எந்த தரப்பினரதும் ஆலோசனைகளையோ நிபந்தனைகளையோ பெற்றுக்கொள்ள நாம் தயாரில்லை. அதனால் அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாமென கட்சிகளிடத்தில் கோரிக்கை விடுக்கிறேன்.

அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும். சம்பிரதாய அரசியல் முறையினால் இந்நாட்டை முன்னேற்ற முடியாது. மீண்டும் சம்பிரதாய அரசியல் முறையின் ஊடாக நாட்டை அழிக்க இடமளிக்க போவதில்லை. இந்நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். அந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன். அது தொடர்பிலான நடவடிக்கைகளை பாராளுமன்றத்துடன் முன்னெடுப்பேன். குறிப்பாக கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே பொறுப்பு கூறுவோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அந்த முயற்சிகளை வெற்றிகொள்வோம்” என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image