ஆசிரியர் ஆட்சேர்ப்பில் ஆங்கிலத்தை கட்டாயமாக்க நடவடிக்கை – ஜனாதிபதி

ஆசிரியர் ஆட்சேர்ப்பில் ஆங்கிலத்தை கட்டாயமாக்க நடவடிக்கை – ஜனாதிபதி

ஆசிரியர் ஆட்சேர்ப்பில் ஆங்கிலத்தை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டுவரப்படும்.

 

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி தொடர்பான புதிய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதில் தாமும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.

 

மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நேற்று (25) காலை கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

 

நாட்டின் எதிர்காலம் கல்வியினால் தீர்மானிக்கப்படுவதாகவும், 21ஆம் நூற்றாண்டுக்கு உகந்த கல்வியை நாட்டின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு அனைவரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 2035 ஆம் ஆண்டளவில் நாட்டில் புதிய கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் அபிலாஷை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

எதிர்காலத்தில் கல்வியை நவீனமயப்படுத்துவதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் மிக முக்கியமான தேசிய வளம் இளைஞர்கள் என்றும், எதிர்கால சந்ததியினருக்கு முறையான கல்வியை வழங்குவதன் மூலம் இலங்கையை இந்து சமுத்திரத்திரத்தில் பிரதான கேந்திர மையமாக மாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

காலநிலை மாற்றத்தை ஒரு பாடமாக மாற்றவும், புதிய வரலாற்று நிறுவனத்தை நிறுவவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பாடசாலை பாடத்திட்டம் மற்றும் பல்கலைக்கழக கல்வியில் புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். அத்தோடு அனைத்து மாணவர்களும் அறிவியல் மற்றும் கலை பாடங்களை படிக்க வேண்டும்.

 

மேலும், புவியியல், வரலாறு போன்ற பாடங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், முதலில் உயர்தரப் பாடங்கள் நடைபெறும் அனைத்துப் பாடசாலைகளும் இணையத்துடன் இணைக்கப்படும் என்றும், அதன்பின்னர் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இணைய வசதி வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

எதிர்வரும் 10 வருடங்களுக்குள் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆங்கிலக் கல்வியை வழங்குவதற்கும் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பில் ஆங்கிலத்தை கட்டாயமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image