மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு மத்தியில் மே தினம்

மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு மத்தியில் மே தினம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதான அரசியல் கட்சிகளால் நாடளாவிய ரீதியில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் எழுச்சி போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று மே தினம் அமைந்துள்ளது. காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுக்கும் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்களின் கரங்கள் வலுசேர்த்துள்ளன.  தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளும் போராட்டக் களத்தில் குதித்துள்ளன.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு. மின்தடை முதலான நாட்டின் தற்போதைய பொருளாதார - அரசியல் நெருக்கடி, முழு நாட்டு மக்களும் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். நாட்டின் தற்போதைய நிலைமை தொழிலாளர் வர்க்கத்தை பெரிதும் பாதித்துள்ளது. 

தொழில் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்பட்டு, நிர்வாகத்தின் கெடுபிடிகள் உச்சம் தொட்டுள்ள சூழ்நிலையிலேயே தாங்கள் இம்முறை மே தினத்தை எதிர்கொள்வதாக மலையக பெருந்தோட்டத்  தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்க தரப்புகளில் இருந்து தமக்கு உரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

" மே முதலாம் திகதி என்பது தொழிலாளர்களுக்கான தினமாகும். அந்நாளையும் நம் நாட்டு அரசியல் வாதிகள், அரசியல் மயப்படுத்திவிட்டனர். அதனால் எமக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.  இம்முறை வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு, எமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளோம்." என சில தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் கூட்டங்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமனவின் மே தின கூட்டம் இன்று காலை நுகேகொடையில் இடம்பெறவுள்ளது. மே தின கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்த பொதுஜன பெரமுனவினர் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தனர். நுகேகொடையில் இடம்பெறும் மே தினக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கலந்துக்கொள்ளமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மாத்திரம் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளார்கள்.</p>

ஐக்கிய மக்கள் சக்தி

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று காலை 08.30 மணியளவில் புதுக்கடையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாஸவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து நினைவு கூரல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 க்கு கொழும்பு - கெம்பல் மைதானத்திலிருந்து (கெம்பல் பார்க்) பேரணியாக சுதந்திர சதுக்கத்திற்கு சென்று அங்கு பிரதான கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணி

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்றைய தினம் 4 பிரதான நகரங்களில் மே தின கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதற்கமைய காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்திலும், மாலை 03 மணிக்கு கொழும்பு, மாத்தறை மற்றும் அநுராதபுரம் ஆகிய நகரங்களில் கூட்டம் இடம்பெறவுள்ளது.

கொழும்பு மாளிகாவத்தையில் இருந்து பேரணியை ஆரம்பித்து கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கு பிரதான கூட்டத்தை நடத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசிய கட்சி இம்முறை மே தின கூட்டத்தை நடத்தவில்லை. காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவில் கறுப்பு கொடிகளை ஏற்றி அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

மே தினத்தை முன்னிட்டு சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 1000 விவசாயிகளை ஒன்றிணைத்து பொலன்னறுவை சிடி சென்டர் நிலையத்திலிருந்து,பொலன்னறுவை வைத்தியசாலை வரை பேரணியாக செல்லவுள்ளார். சுதந்திர கட்சியின் மாவட்ட உறுப்பினர்களுக்கும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமான சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இடதுசாரி கட்சிகள்

ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையில் இன்று பகல் ஹைட் - பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் இன்று பகல் பத்தரமுல்லயில் உள்ள அபேகமவில் மே தின விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

மே தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தமிழ் தேசிய மேதின கூட்டம் இன்று பகல் 2 மணிக்கு&nbsp; கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள மீனிசை சிறுவர் பூங்கா திடலில் இடம்பெறவுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image