பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு எட்டப்பட வேண்டும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு எட்டப்பட வேண்டும்

பெருந்தோட்டங்களில் தற்போது தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர். இப்பிரச்சினைகள் யாவற்றிற்கும் ஒரு காத்திரமான தீர்வு எட்டப்பட வேண்டுமென தெரிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் உள்ள முதலாளிமார் சம்மேளனத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றிற்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பின்னதாக தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். நாளாந்தம் பறிக்கப்படும் கொழுந்தின் நிறை குறைத்தல், அரைபேர் போடுவித்தல், காவல் தொழிலாளர்களுக்கு பௌர்ணமி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் தொழில் செய்தும் 1 1/2 நாள் பேர் வழங்கப்படுவதில்லை. சில தோட்டங்களில் 22 கிலோவிற்கும் அதிகமாக கொழுந்து பரித்தால் மட்டுமே மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

இதுபோன்ற தொழிலாளர்களின் அடிப்படை தேவைகள் மறுக்கப்படுவதோடு அவர்களுக்கான சலுகைகளும் உரிமைகளும் வழங்குவதில் தோட்ட நிர்வாகங்கள் பின் நிற்கின்றன. இதை ஒருபோதும் இ.தொ.கா அனுமதிக்க போவதில்லை. எனவே கம்பனிகள் இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்தி அவர்களது தேவைகளையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற கம்பனிகளும் தோட்ட நிர்வாகங்களும் முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தேன். – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image