ஓமானுக்கு சென்றுள்ள 12 இலங்கை பணிப்பெண்கள் மாயம்!

ஓமானுக்கு சென்றுள்ள 12 இலங்கை பணிப்பெண்கள் மாயம்!

பணிப் பெண்களாக ஓமானுக்குச் சென்றுள்ள 12 இலங்கை பெண்கள் மாயமாகியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் டொலரை கொண்டுவர பெரும்பாடுபடுகின்ற பெண்களை, பணத்துக்காக விற்கும் சிலர் தொடர்பாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுலா விசாவை பயன்படுத்தி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபிக்கு அழைத்துச்செல்லப்பட்ட பெண்களை, அவர்களின் விருப்பமின்றி ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

இலங்கை பெண்கள் 12 பேரும் அந்த குழுவில் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் நேற்று ஓமானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அவர்களது தொலைபேசிகள் இயங்கவில்லை. இந்த 12 பெண்களில் ஒருவரான சசிகலா என்பவரின் கணவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஓமானில் அலுவலகம் ஒன்றில் தங்கியிருக்குமாறு பெண்களை கூறியுள்ளனர். அந்த முதலாளியுடன் நான் பேசினேன். திங்கட்கிழமை அவர்களுக்கு தொழில் கிடைக்குமென கூறினார். அது தொடர்பில் மேலதிக தகவல் எனக்கு தெரியாது. எனது தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நான் மருத்துவ பரிசோதனையில் சித்திபெறாததால், மனைவியை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்தேன். அவர்களுக்கு தொழில் விசா வழங்கப்படவில்லை. சுற்றுலா விசாவே வழங்கப்பட்டுள்ளது.மனைவி அங்கு அச்சமடைந்துள்ள தால், இலங்கைக்கு அழைக்குமாறு கூறினார். பின்னர் நான் அவர்களுடன் கதைத்த போது, நான்கு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை கேட்டனர். அவர்களுக்கு செலவு செய்துள்ளோம். அந்த பணம் வேண்டுமென கூறுகின்றனர். அவர்களுக்கு இப்போதைக்கு பிரச்சினை இல்லை எனவும் அவர்கள் கூறினர்.

இந்த பெண்கள் சுற்றுலா விசா மூலம் அபுதாபிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அவர்களது கடவுச்சீட்டுகள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் பறிக்கப்பட்டுள்ளன. பின்னர், வேலைவாய்ப்பு முகவர் நிறுவன தரகர்களால் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அபுதாபியிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, தூதரகத்தின் தொழில் பிரிவு அதிகாரிகள் கடந்த (13) அந்த வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அனைவரும் வேலை செய்வதற்கு விரும்புவதாகவும் கடிதமொன்றில் பெண்களிடமிருந்து அதிகாரிகள் கையொப்பங்களை பெற்றிருந்தனர். எனினும், இந்த கடிதத்தில் இடப்பட்டுள்ள சசிகலாவின் கையொப்பத்துக்கும், அவர் கடவுச்சீட்டில் இட்டிருந்த கையொப்பத்துக்குமிடையே வேறுபாட்டை காண முடிகிறது.

இந்த கடிதம் பெறப்பட்டு இரண்டு நாட்களின் பின்னரே இவர்கள் ஓமானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தூதரகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, விசாரணை நடத்தி வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித விற்பனை மற்றும் ஆட் கடத்தல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டா குறிப்பிட்டார்.

இந்த ஆட்கடத்தல் நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image