வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கை - ஜனாதிபதி அறிவுத்தல்

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கை - ஜனாதிபதி அறிவுத்தல்
வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தையில் பயிற்சிபெற்ற பணியாளர்களுக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
 
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குறித்த தொழில்சார் திறன்கள், அதிக சம்பளம் மற்றும் தொழில் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
 
பத்தரமுல்லை, கொஸ்வத்தை, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் (11)  கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்தார்.
 
உள்நாட்டு பொருளாதாரத்திற்கு பங்களித்து, அனைத்து தரப்பினரதும் நலன்களை பாதுகாக்கும் அதேவேளையில், வெளிநாட்டு தொழில் சந்தையின் சிறந்த பலன்களை மக்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ளக்கூடிய திறமையான மற்றும் சமமான வழிகளை உருவாக்குவதே “இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின்” பணியாகும்.
 
வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குதல், வெளிநாடு செல்வோரின் பயிற்சி மற்றும் பதிவு செய்தல், சமரசம், நலன்புரி, சட்ட விவகாரங்கள், சந்தைப்படுத்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவை நிறுவனத்தின் முக்கிய செயற்பாடுகளாகும்.
 
திறமையான மற்றும் பயிற்சிபெற்ற பணியாளர்களைக் கண்டறிவது என்பது, உலகெங்கிலும் உள்ள தொழில் வழங்குனர்கள் மற்றும் வேலைவாய்ப்பு முகவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும். இத்தகைய பின்னணியில், திறமையான, நேர்மையான மற்றும் பயிற்சிபெற்ற தொழிலாளர்களை வழங்குவதற்கான புகலிடமாக இலங்கை நற்பெயரைப் பெற்றுள்ளது.
 
இலங்கை மருத்துவம், பொறியியல், கணக்கியல், கட்டிடக்கலை, கற்பித்தல், சட்டம், வங்கியியல், ஹோட்டல் மற்றும் உணவகம், தாதியர் மற்றும் கணினி உட்பட பல்வேறு துறைகளில் பயிற்சிபெற்ற பணியாளர்களைக் கொண்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் திறமையான தொழிலாளர்களை வழிநடத்தும் தேசிய வேலைத்திட்டத்தில் பணியகம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் ஜனாதிபதியின் அவதானத்துக்கு கொண்டு வரப்பட்டது.
 
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலம் பெறப்படும் பரிமாற்றங்களினால் தேசிய வருமானத்திற்கு உயர் நிதி மாற்று விகித பங்களிப்பு கிடைப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
 
தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பணி இடங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியின் விசேட கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
  
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், பணியகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image