EPF/ETF ஐ பாதுகாக்க வலியுறுத்தி யாழில் போராட்டம்: 9 தொழிற்சங்கங்கள் கூட்டாக அழைப்பு!

EPF/ETF ஐ பாதுகாக்க வலியுறுத்தி யாழில் போராட்டம்: 9 தொழிற்சங்கங்கள் கூட்டாக அழைப்பு!
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்காக EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (28) திங்கட்கிழமை மதியம் 12 - 01 மணி வரையில் முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்திற்கு யாழ். பல்கலைக் கழக ஊழியர் சங்கம் உள்ளிட்ட யாழ் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் 9 தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
 
அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட பரிந்துரையின் மூலமாக ஊழியர் சேமலாப நிதி - EPF மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி - ETF நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த முனைவதன்மூலம் EPF/ETF நிதியங்களில் கணக்குகளைக் கொண்டுள்ள சுமார் 25 இலட்சம் உழைக்கும் வர்க்க அங்கத்தவர்களின் ஒரேயொரு ஓய்வூதியச் சேமிப்பினை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த அரசாங்கம் முயல்கின்றது.
 
பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையின்படி இந்த உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் EPF/ETF கணக்குகளின் மீது சுமத்தப்படும் போது அனைத்து ஊழியர்களினதும்  (EPF/ETF அங்கத்தவர்களினதும்) சேமிப்புக்களில் இருந்தும் அரைவாசித்தொகை (50%) எதிர்வரும் 16 வருட காலப்பகுதியில் இல்லாமற் போகும் அபாயம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக அரச ஊழியரின் ஓய்வூதிய நிதியையும் இவ்வாறு கையாள அரசாங்கம் முற்படுகின்றது. இதன் மூலம் EPF/ETF அங்கத்தவர்களுக்கு நிதிரீதியான உடனடிப்பாதிப்பும் நீண்டகாலத்தில் முழுமையாக இவ்விரு நிதிகளும் கிடைக்கபெறாத அபாய நிலையும் உள்ளது.
 
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 28.08.2023 திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் அடையாள போராட்டங்கள் பல இடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் இங்குள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் மதியம் உணவு இடைவேளையின்போது (12 - 01 மணி) ஒரு அடையாள போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. 
 
எனவே அதற்கு அனைவரது ஆதரவினையும் வேண்டி நிற்பதோடு, மேற்படி EPF/ETF மற்றும் ஓய்வூதிய நிதிக்கையாளல் மூலம் பாதிக்கப்படவிருக்கும் அரச, அரச மருவிய மற்றும் தனியார் துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும், மக்களையும் இவ் அடையாளப் போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
பின்வரும்  தொழிற்சங்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
1 - பல்கலைக்கழக ஊழியர் சங்கம், யாழ் பல்கலைக்கழகம்
 
2 - வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
 
3 - அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
 
4 - பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம்
 
5 - வடமாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் சங்கம்
 
6 - வடமாகாண கால்நடை போதானாசிரியர் சங்கம்
 
7 - ஶ்ரீ லங்கா தபால் தொலைதொடர்பு சேவை உத்தியோகத்தர் சங்கம்
 
8- வடமாகாண அரச சாரதிகள் சங்கம்
 
9 - வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி  உத்தியோகத்தர் தொழிற்சங்கம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image