மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான குழு வரவு-செலவுத் திட்டத்திற்கு முன் நடவடிக்கை எடுக்கும் - ஜீவன்

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான குழு வரவு-செலவுத் திட்டத்திற்கு முன் நடவடிக்கை எடுக்கும் - ஜீவன்

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழு, பாதீட்டுக்கு முன்னர் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்

என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (03.11.2023) கொழும்பில் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

" நாம் 200 நிகழ்வு பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் நடந்து முடிந்துள்ளது. எமது அழைப்பை ஏற்று நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதிக்கும், சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர், வெளிநாட்டு  தூதுவர்கள் ஆகியோருக்கு நன்றிகள். அதேபோல தமிழக முதல்வரால் நிகழ்வில் பங்கேற்க முடியாமல்போனாலும் வாழ்த்து செய்தியை காணொளியாக அனுப்பி வைத்து தமிழக அரசின் ஆதரவையும் வெளிப்படுத்தினார். அவருக்கும் எமது நன்றிகள். 

இந்திய அரசின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கும் கடந்த 02 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவும் மகிழ்ச்சியளிக்கின்றது.

" மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழு, பாதீட்டுக்கு முன்னர் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளும். அத்துடன், கல்வி, சுகாதாரம் உட்பட மலையக மேம்பாடுகள் சம்பந்தமாகவும் இந்த குழு கவனம் செலுத்தும்."

அத்துடன், பெருந்தோட்டக் கம்பனிகளால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'அவுட்குரோ' முறைமை தவறு, எனவே, தொழிலாளர்களுக்கு வருமானம் அதிகரிக்ககூடிய வகையில் அந்த 'அவுட்குரோ' முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும் - எனவும் அமைச்சர் கூறினார்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இது பற்றி அறிவித்தார். பிரதமர் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நானும் இருக்கின்றேன். ஏனைய அமைச்சர்களும் உள்ளனர். அனைவரும் இணைந்து பாதீட்டுக்கு முன்னதாக தீர்வை முன்வைப்பார்கள். சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்புகளின் ஆலோசனைகளும் இதற்காக உள்வாங்கப்படும்.  காணி உரிமை மட்டுமல்ல கல்வி, சுகாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சம்பந்தமாகவும் ஆராய்ந்து, உரிய தீர்வு பொறிமுறையை இந்த குழு முன்வைக்கும்.

அதேபோல இந்திய அரசால் மலையக மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள 3 ஆயிரம் மில்லியனில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் பற்றி ஆராய எமது அமைச்சில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மலையக தமிழ் எம்.பிக்களுடன் மட்டுமல்ல மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் ஆலோசனைகள் பெறப்படும். கட்சி, தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து மலையக மேம்பாட்டுக்காக இந்த நிதியை பயன்படுத்த முன்வர வேண்டும்.

பாதீடு ஒதுக்கீடு

பாதீட்டில் எனது அமைச்சுக்கு 14 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வழமையாக 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் நிலையில், இம்முறை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதில் 8 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா உட்கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்தப்படும். ஆசிரியர்கள் விடுதி உட்பட மலையக பெருந்தோட்ட கல்விதுறை அபிவிருத்திக்காக 1500 - 2000 மில்லியின் ரூபா வரை ஒதுக்கப்படும். 

சம்பளத் தீர்வு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 'அவுட்குரோ' சிஸ்டம் சிறந்த சம்பள தீர்வாக அமையும். ஆனால் பெருந்தோட்டக் கம்பனிகளால் தற்போது அமுல்படுத்தப்படும் முறைமை ஏற்புடையது அல்ல. எனவே, பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சு நடத்தி இதனை மாற்றி, சிறந்த பொறிமுறை உருவாக்கப்படும். இதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் உடன்படாவிட்டால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

மனோ கணேசனுக்கு அழைப்பு விடுத்தோம்

எல்லோரும் ஒன்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்கம். நாம் 200 நிகழ்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அழைப்பு சென்றுள்ளது. சுமந்திரன், சாணக்கியனும் வருகை தந்திருந்தனர். திகாம்பரமும் வரமுடியாமை குறித்து  தெளிவுபடுத்தினார். வடிவேல் சுரேசும் வரமுடியாமைக்கான காரணத்தை தொலைபேசி மூலம் அறிவித்தார். ஆகவே மனோ கணேசனின் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேடையில் நான் ஏறினேன். பெரும்பான்மை இனத்தை சேர்ந்த எதிரணி அரசியல் தலைவர்கள் கூட நிகழ்வுக்கு வந்திருந்தனர். என் சமூகத்தை சார்ந்த அரசியல் தலைவர்கள் வராமை கவலையளிக்கின்றது. மனோ கணேசனுக்கு அழைப்பு விடுத்தோம். ஜெனிவா சென்று 20 ஆம் திகதி நாடு திரும்பினேன். இது நமது சமூகத்துக்கான நிகழ்வு, அழைப்பிதழை நீங்கள் எதிர்பார்க்க கூடாது இருந்தாலும் அனுப்பினோம் என மனோ கணேசனிடம் கூறினேன். சொந்த வீட்டு கல்யாணத்துக்கு யாரும் அழைப்பிதல் கொடுக்க மாட்டார்கள். ஆனால் எங்களை வெளிநாட்டவர்களாக தான் பார்க்கின்றனர் என்பது தெளிவாகின்றது. அவரின் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்." - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image